அரசு அதிகாரி மனைவியிடம் ரூ.16 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன். இவர், புதுவை அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனராக உள்ளார். இவரது மனைவி ஜெயா (வயது 47). இவர், கடந்த 2013-ம் ஆண்டு புதுவையை சேர்ந்த அகிலன், செல்வம், அய்யனார் ஆகியோர் மூலம் ஒரு வீட்டை வாங்க முன் பணமாக ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்தார்.
பின்னர் ஜெயா விசாரித்த போது அந்த இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்க முயற்சி செய்வது தெரிய வந்ததும் கொடுத்த பணத்தை ஜெயா திருப்பி கேட்டார். அல்லது வேறு இடத்தை வாங்கி தருமாறு ஜெயா வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அகிலன் உள்பட 3 பேரும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. வேறு இடமும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜெயா இதுகுறித்து கோர்ட்டில் முறையிட்டு மனு தாக்கல் செய்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி போலி பத்திரம் தயாரித்து பணம் மோசடி செய்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி ஒதியஞ்சாலை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி அகிலன், செல்வம், அய்யனார் ஆகிய 3 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.