தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் - போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை
ஆத்தூர்:
திண்டுக்கல்லில் இருந்து மதுரை, தேனி, பழனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
எனவே இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ்சில் ஏறினார். அவரிடம் மதுரைக்கு டிக்கெட் எடுத்த போது கூடுதலாக ரூ.4 வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து அதிகாரி என தெரியாமல் கூடுதலாக கட்டணம் வசூலித்ததால் பஸ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அனைத்து தனியார் பஸ்களிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் தோமையார்புரத்தில் மதுரை, தேனிக்கு சென்ற அனைத்து தனியார் பஸ்களிலும் போக்குவரத்து துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.