செய்திகள்
கைது

விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள்-வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது

Published On 2021-11-13 11:43 GMT   |   Update On 2021-11-13 11:43 GMT
வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள்- வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றது.

ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.

பிடிப்பட்ட அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது21), நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ராஜி(18), அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன்(20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வீரபாகு(20) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

முன் விரோதத்தில் புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடி குண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வாணரப்பேட்டையை பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News