செய்திகள்
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து முன்னாள் ராணுவ வீரர் பலி
காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது52). ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது ஓசூர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு பணிக்கு செல்வதற்காக ராமு தனது மோட்டார் சைக்கிளில் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுண்டேகுப்பம் என்ற இடத்தில் செல்லும் போது மோட்டார் சைக்கிள் திடீரென எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இதில் ராமுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ராமு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.