செய்திகள்
மது குடித்து வந்ததால் தகராறு: கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
மது குடித்து வந்த கணவரை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டை தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது26). கூலி வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வேலையின் காரணமாக தருமபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வாரிய குடியிருப்பு பகுதி அருகே சண்முகம் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சண்முகத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று சண்முகம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை மனைவி கண்டுத்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட சண்முகம் வீட்டின் கதவை பூட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக கிடந்த சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.