செய்திகள்
கைது

அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மதுரை வாலிபர்கள் 2 பேர் கைது- 132 பவுன் நகைகள் மீட்பு

Published On 2020-09-10 02:12 GMT   |   Update On 2020-09-10 02:12 GMT
ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மதுரையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள காதி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஆண்டு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். 2 நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 132 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் சோமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான தனி போலீஸ் படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில் நாமக்கல் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலருக்கு காரைக் குடி சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக மதுரை கூடல்நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 36), பாண்டித்துரை (26) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் காதிநகர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 132 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News