செய்திகள்
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களின் வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் சிலர் அதீத ஆசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து விட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பதில்லை. பெற்றோர்கள் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி இழப்பு அந்த குடும்பத்திற்கே.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள். உங்கள் குழந்தைகளையும் செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.