செய்திகள்
கழிவுகளை வெளியேற்றி விதிமீறல் - திருப்பூரில் 14 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
அதிகாரிகள் குழுவினர் சமீபத்தில் நடத்திய ஆய்வில், விதிகளை மீறிய 14 நிறுவனங்கள் சிக்கின.
திருப்பூர்:
திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து சாய, சலவை ஆலை, பிரிண்டிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. சில சாய ஆலை, பிரிண்டிங் நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்கி ரசாயனம் மிகுந்த கழிவுநீரை நீர் நிலைகளில் திறந்துவிட்டு, இயற்கையை பாழ்படுத்துகின்றன.
இந்நிலையில், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் வடக்கு சரவணன் மற்றும் பறக்கும்படை பொறியாளர் மோகன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சமீபத்தில் நடத்திய ஆய்வில், விதிகளை மீறிய 14 நிறுவனங்கள் சிக்கின.
பலவஞ்சிபாளையம், விஜயாபுரம், முதலிபாளையம், தொட்டி பாளையம், போயம்பாளையம் பகுதிகளில் 12 பிரிண்டிங் நிறுவனங்கள், நொச்சிபாளையத்தில் பிளீச்சிங் நிறுவனம் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. வஞ்சிபாளையத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரித்த நிறுவனமும் சிக்கியது.
இந்தநிலையில் மாசு கட்டுப்பாடு வாரிய பரிந்துரைப்படி 14 நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இதையடுத்து அந்நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.