செய்திகள்
துணை முதல்வர் எழிலரசன் விசாரணை முடிந்து அறையில் இருந்து வெளியே சென்ற காட்சி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மருத்துவ கல்லூரியில் துணை முதல்வர், பேராசிரியைகளிடம் விசாரணை

Published On 2019-09-23 03:12 GMT   |   Update On 2019-09-23 04:22 GMT
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் துணை முதல்வர், பேராசிரியைகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்தனர்.
ஆண்டிப்பட்டி:

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக க.விலக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருடைய பெற்றோர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். சுமார் 2½ மணி நேரம் பூட்டிய அறைக்குள் விசாரணை நடந்தது. அதில் 25-க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் போலீசார் கேட்டனர். அதில் சிலவற்றிற்கு அவர் பதில் அளித்துள்ளார். சில கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக, நேற்று மாலை 4 மணிக்கு தேனி மருத்துவ கல்லூரிக்கு ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் தனிப்படை போலீசார் வந்தனர். அங்கு மருத்துவ கல்லூரி பேராசிரியை குழுவினரிடம் விசாரணை நடத்தினர்.

அதாவது, ஆள்மாறாட்டம் புகார் குறித்து முன்பு மாணவர் உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்த பேராசிரியைகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்தி இருந்தனர். குழுவில் இடம் பெற்ற கல்லூரி துணை முதல்வர் எழிலரசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியைகள் ஜெயந்தி, விஜயலட்சுமி, எத்யா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை, கல்லூரி முதல்வர் அறையில் நடந்தது. அப்போது அந்த அறை கதவு பூட்டப்பட்டது. இரவு 7 மணியளவில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அங்கு வந்தார். பின்னர் அவரும் விசாரணை நடந்த அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் விசாரணை முடிந்து துணை முதல்வர் எழிலரசன் வெளியே சென்று விட்டார்.

இதற்கிடையே கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜூலை 15-ந் தேதி தேனி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கிய காட்சிகளையும், ஆகஸ்டு 1-ந் தேதி மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சி காட்சிகளையும், அன்றைய தினம் மாணவர் விடுதியில் புதிய மாணவர்கள் வருகை காட்சிகளையும் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் சேகரித்தனர்.

அதில் எதேனும் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு கல்லூரி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி விட்டு தனிப்படை போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களை துருப்புச்சீட்டாக வைத்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆள்மாறாட்ட விவகாரத்தில், 2-வது நாளாக தேனி அரசு மருத்துவ கல்லூரியில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News