தீவிரம் அடையும் நிவர் புயல்- மரக்காணத்தில் பலத்த காற்றுடன் மழை
மரக்காணம்:
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிரபுயலாக மாறி வருகிறது. இந்த புயல் இன்று மாலைக்கு பின் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அழகன்குப்பம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம், அனுமந்தைகுப்பம், கூனிமேடுகுப்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
மேலும் கடலோர பகுதிகளிலும் காற்றின்வேகம் அதிகமாக காணப்படுகிறது. கடல் அலைகள் சுமார் 7 அடி உயரத்துக்கு எழுகிறது. இதனால் மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 19 மீனவகிராமங்களை சேர்ந்த 3,000 மீனவ குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக மரக்காணம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.