ஆன்மிகம்
நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்ற போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி இன்று நடக்கிறது

Published On 2021-01-01 06:55 GMT   |   Update On 2021-01-01 06:55 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த மாதம் 25-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5 மணி முதல் மாலை 5.15 மணிவரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குசநாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டினார்கள்.

மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை உயபகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.

பின்னர் திருமாமணி மண்டபத்தில் இரவு 7 மணிமுதல் இரவு 8 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெறுகிறது. 10-ம் திருநாளான 3-ந்தேதி தீர்த்தவாரியும், 4- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News