செய்திகள்
ஆளில்லா விமானங்கள்

பஞ்சாப்பில் தென்பட்ட ஆளில்லா விமானங்கள்

Published On 2019-10-08 22:48 GMT   |   Update On 2019-10-08 22:48 GMT
பஞ்சாப்பில் கடந்த மாதம் ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
பெரோஸ்பூர்:

பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களை போட ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று பயன்படுத்தப்பட்ட 2 ஆளில்லா விமானங்கள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டன. அவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர்.

முதலில், ஒரு விமானம், பாகிஸ்தான் பகுதியிலேயே 4 தடவை கண்ணில் பட்டது. மற்றொரு தடவை, இந்திய பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரம்வரை தென்பட்டது. இரண்டாவது விமானம், பாகிஸ்தான் பகுதியில் பஸ்டி ராம்லால் எல்லைப்புற காவல் நிலையம் அருகே காணப்பட்டது. 2 விமானங்களும் திரும்பிச் செல்லும்போது, விளக்குகளை அணைத்து விட்டு சென்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டன. இதுபோன்ற விமானங்களை கண்டால் தகவல் அளிக்குமாறு எல்லைப்புற மக்களை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News