விளையாட்டு
ஜோகோவிச் குறித்து தரக்குறைவாக பேசிய செய்தி வாசிப்பாளர்கள்: நேரடியாக ஒளிப்பரப்பானதால் அதிர்ச்சி...
ஜோகோவிச் குறித்து இரண்டு செய்தி தொடர்பாளர்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டது நேரடியாக ஒளிப்பரப்பானதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஜோகோவிச். செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றார். அப்போது, அவர் தடுப்பூசி செலுத்தவில்லை என அதிகாரிகள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஜோகோவிச்சை நாடு கடத்த திட்டமிட்டனர்.
இதனை எதிர்த்து ஜோகோவிச் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாத காலம் வரை விலக்கு அளிக்கப்படலாம் என ஜோகோவிச் தரப்பில் வாதிடப்பட்டது. இதில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் முன்னணி செய்தியானது. அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு அவரது செய்தியை ஒளிப்பரப்பு செய்தனர்.
ஆஸ்திரேலியாவின் செவன் நியூஸ் சேனல் செய்தியாளர்கள் மைக் அம்ரோர்- ரெபேக்கா மாடர்ன் ஆகியோர் செய்தி வாசிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக என நினைத்து, ஜோகோவிச் குறித்து தரக்குறைவாக பேசினர். அவர் பொய் சொல்கிறார், மோசமான நபர். பொய் சொல்லி தப்பிக்க பார்க்கிறார் என திட்டி தீர்த்தனர்.
ஆனால் மைக் ஆன்-இல் இருந்ததால் அவர்கள் பேச்சு நேரடியாக ஒளிப்பரப்பானது. தரக்குறைவான பேச்சு வெளிப்படையாக ஒளிப்பரப்பு ஆனது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட வார்த்தை பரிமாற்றம் வெளி உலகத்திற்கு தெரியக்கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.