செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

போலீஸ்-தீயணைப்பு படையினர் 3,186 பேருக்கு பதக்கம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2020-01-14 06:22 GMT   |   Update On 2020-01-14 06:22 GMT
பொங்கல் திருநாளையொட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் 3,186 பேருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்களது செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் நிலை1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர், கம்மியர் மற்றும் தீயணைப் போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

ரொக்க பரிசு பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும். அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

காவல் வானொலிபிரிவு, நாய்படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில் நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News