செய்திகள்
முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையை தகர்க்க முயன்ற போராட்டக்காரர்கள்

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நீண்டகால சிறைவாசம்- புதிய உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்

Published On 2020-06-27 03:11 GMT   |   Update On 2020-06-27 03:11 GMT
அமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்வதற்கு வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால் கழுத்தை அழுத்தியுள்ளார். சுற்றி இருந்த மற்ற மூன்று போலீஸ்காரர்களும் அவரை தடுக்கவில்லை. இதனால் ஜார்ஜ் ஃபிளாய்ட் மூச்சுத் திணறி மரணம் அடைந்தார். 

ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும்  பெரும் மோதல்கள் வெடித்தன. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன.



பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம், இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்தது. அமெரிக்கா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்போராட்டம் விரிவடைந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், மிகவும் வலுவான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

‘அமெரிக்க நினைவுச்சின்னங்கள், நினைவிடங்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்கும் மிக வலுவான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதன்மூலம், தேசத்திற்கு எதிரான சட்டவிரோத செயல்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படும்’ என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த நிர்வாக உத்தரவு தொடர்பான விவரங்களை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை.

கடந்த திங்கட்கிழமை, வெள்ளை மாளிகை அருகே உள்ள முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் சிலையை சேதப்படுத்த போராட்டக்காரர்கள் முயன்றது தொடர்பாக பேசிய டிரம்ப், வலுவான உத்தரவை தான் தயாரித்து வருவதாகவும், அது இப்போதுள்ள சட்டத்தை வலுப்படுத்தும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தலைவர்களின் சிலைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எந்த ஒரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தினாலோ, சேதப்படுத்த முயற்சித்தாலோ அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க தற்போதுள்ள சட்டம் வகை செய்கிறது. 
Tags:    

Similar News