பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகல்? ரவிசாஸ்திரியுடன் கங்குலி ஆலோசனை
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் ரவிசாஸ்திரி. அவர் 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் வருகிற 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடர் வரை இருக்கிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்க ரவிசாஸ்திரி விரும்பவில்லை என்றும் அவர் பதவி விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுபற்றி அவர் கிரிக்கெட் வாரியத்திடம் தகவல் தெரிவித்து விட்டதாகவும் ஊடங்கங்களில் செய்தி வெளியானது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் தற்போது இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி முடியும் வரை அங்கு தங்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைவதை அடுத்து ரவிசாஸ்திரியுடன் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, “கிரிக்கெட் வாரிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் துணைத் தலைவர் லண்டனுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணியினருடன் பல்வேறு விஷயங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி விவாதிப்பார்கள்.
பயிற்சியாளர் பதவியில் ரவிசாஸ்திரி தொடர விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருப்பதால் அதுபற்றி விவாதிக்கப்படும். ஆனால் அதுபற்றி மிகவும் முன் கூட்டியே வெளியே பேசி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.