செய்திகள்
கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலர்களின் குழந்தைகளுக்கு நிதியுதவி - அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலர்களின் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நிதியுதவி வழங்கினார்.
சிவகங்கை:
கொரோனா 2-ம் அலையின்போது சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் ஒன்றியம், கருங்குளம் ஊராட்சி செயலாளர் ஜெயசுதா, திருப்புவனம் ஒன்றியம், சொட்டதட்டி ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ், சிங்கம்புணரி ஒன்றியம் எருமப்பட்டி ஊராட்சி செயலாளர் முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மொத்தம் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதற்கான விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலாளர்களின் குழந்தைகளுக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து ஊராட்சி செயலாளர்களின் 5 குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் நாகராஜன், மாநில துணைச் செயலாளர் வடிவேலன், மாவட்ட தலைவர் பாக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து மற்றும் பள்ளத்தூர் ரவி, நகர தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.