செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் - தி.மு.க.வினர் சாலை மறியல்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் காஞ்சீபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் திரளான தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
உத்திரமேரூரில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணி தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.