செய்திகள்
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
காரிமங்கலம் அருகே உள்ள பெரிய பூலாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 45). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாரண்டஅள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். பாலக்கோடு அருகே உள்ள போயர் கொட்டாய் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் தர்மன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தர்மன் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.