செய்திகள்
சுரங்கப்பாதையில் சிக்கிய பயணிகள்

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்களை மூழ்கடித்த வெள்ளம் -இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த பயணிகள்

Published On 2021-07-21 15:29 GMT   |   Update On 2021-07-21 17:03 GMT
ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலரை காணவில்லை.
பீஜிங்:

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழையால், அணைகள் மற்றும் நீர் நிலைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டி உள்ளன. பெரிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைகளை உடைத்து சீறிப்பாய்ந்த வெள்ளம், ஊருக்குள் புகுந்தது. இதனால் ஜெங்ஜோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் தெருக்களில் வெள்ளம் புகுந்தது. திடீர் வெள்ளத்தினால் ஷாப்பிங் மால்கள், பள்ளிகள் மற்றும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெங்ஜோ நகர சுரங்கப்பாதையில் வெள்ளம் புகுந்ததால் ஏராளமான பயணிகள் சிக்கியுள்ளனர். மின்தடை ஏற்பட்டதால் ரெயில்கள் சுரங்கங்களில் நின்றுவிட்டன. ரெயில்களில் இருந்த மக்கள் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்தனர். ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் தவிக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.



சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள பயணிகளை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் 150-க்கும் மேற்பட்ட போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிலரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் நடைபெறுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் ஆறாவது சூறாவளியான இன்ஃபாவால் பாதிக்கப்பட்ட மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில், தற்போது வரலாறு காணாத பலத்த மழை பெய்துள்ளது. மாகாண தலைநகர் ஜெங்ஜோ நகரில் கடந்த இரண்டு நாட்களில் அதிகமான மழை பதிவாகி உள்ளது.

சுரங்கத்தில் இருந்து வீடியோவில் பேசும் ஒருவர் "வெள்ளம் எங்களின் தோள்ப்பட்டை வரை வந்துகொண்டு இருக்கிறது; இந்த வெள்ளம் எங்களை  இழுத்துக்கொண்டு இருக்கிறது; எங்களில் பலர் கையில் குழந்தைகளுடன் சிக்கியுள்ளோம். வெள்ளத்தில் தண்டவாளத்தை பற்றிக்கொள்வதற்கு மிகவும் சிரமாக உள்ளது, பிடித்துக் கொள்ளாவிடில் நாங்களும் அடித்து செல்லப்படுவோம்" எனப் பேசியிருந்தார்.

மூன்று நாளில் ஜெங்ஜோவில் பெய்த மழையளவு, "ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பெய்த கடும் மழை" என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் நாட்டின் சில பகுதிகளில் கார் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆளுயரத்திற்கு ஓடும் வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கின்றனர். மேற்கு ஜெங்ஜோவின் லுயோயாங் நகரில் உள்ள 'யிஹெட்டான்' அணையில் கொள்ளளவு முழு கொள்ளவை எட்டி உள்ளது. அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News