மன்னார்குடி அருகே சாலையை சீரமைக்ககோரி லாரியை சிறை பிடித்த கிராமமக்கள்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பைங்காட்டூர் கடைதெரு முதல் ஒரத்தூர் பாலம் கோரையாரது கீழ்கரை வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அக்கிராமமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இங்கு அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கிராமமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோரையாற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளி கொண்டு ஒரு லாரியும், மணல் அள்ளும் எந்திரமும் பைங்காட்டூர் வழியாக இன்று காலை வந்தன. அதனை கிராமமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பைங்காட்டூர் கிராம நிர்வாக அலுவலர், (பொறுப்பு) ராஜ்மோகன், தலையாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பைங்காட்டூர்- ஒரத்தூர் சாலையை சீரமைத்தால்தான் லாரியை விடுவிப்போம் என்று கிராமமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.