செய்திகள்
பூரண கும்ப மரியாதையுடன் மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள்

19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு- மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

Published On 2021-11-15 07:07 GMT   |   Update On 2021-11-15 07:07 GMT
மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம்:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதில் ஒரு கட்டமாக பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தற்போது தொற்று நோய் பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

தீபாவளி பண்டிகை முன்பே மழையின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 1,145 தொடக்கப்பள்ளிகள், 267 நடுநிலைப் பள்ளிகள், 187 உயர்நிலைப்பள்ளிகள், 205 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,804 பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன.

மாணவர்கள் ஆர்வத்துடன் இன்று காலை பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் இன்று உற்சாகமாக பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது.

Tags:    

Similar News