செய்திகள்
மாணவர் சேர்க்கையில் அசத்தும் பல்லடம் அரசு பள்ளி
புதுமையான கற்பித்தல் வழிமுறை, மாணவர் தனித்திறன் மேம்பாட்டு வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பள்ளியில் உள்ளன.
பல்லடம்:
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பெற்றோர்கள்தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வந்துள்ளனர். இந்தநிலையில் பல்லடம் அருகே கணபதிபாளையம் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் களப்பணியாற்றி பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை சுதா கூறுகையில்:
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியை கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். புதுமையான கற்பித்தல் வழிமுறை, மாணவர் தனித்திறன் மேம்பாட்டு வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பள்ளியில் உள்ளன. அனைத்து சிறப்புகளையும் உணர்ந்து அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு சேர்கின்றனர். நடப்பு ஆண்டு 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழி என 1 முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 16 பிரிவுகள் உள்ளன. பள்ளியில் 11 வகுப்பறை கட்டடங்கள் உள்ள நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர்களும் அதிகம் பணியமர்த்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு சுதா கூறினார். இப்பள்ளியில் கடந்த 2017-18ல் 478, 2018-19ல் 487, 2019-20ல் 530 மற்றும் 2020-21ல் 584 ஆகவும் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. இக்கல்வியாண்டில் 670ஆக அதிகரித்துள்ளது என்றனர்.