உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தென்காசியில் பறக்கும் படை சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது

Published On 2022-01-29 07:32 GMT   |   Update On 2022-01-29 07:32 GMT
தென்காசி நகராட்சிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஹென்றி பீட்டர் தலைமையிலான பறக்கும் படை குற்றாலத்தில் அதிரடி வாகன சோதனை நடத்தியது.
தென்காசி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக பணம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள தேர்தலில் தேர்தலுக்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிக்கு தலா 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி நகராட்சிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஹென்றி பீட்டர் தலைமையிலான பறக்கும் படை குற்றாலத்தில் அதிரடி வாகன சோதனை நடத்தியது. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் ரூ.3.14 லட்சம் இருந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் காரை ஓட்டி வந்த மணிமுத்தாறு புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த அருள்செல்வன் (வயது45) என்பவரிடம் விசாரணை நடத்தியது.

அதில் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதற்காக பணத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News