ஆன்மிகம்
சுதர்சனப் பெருமாள்

ஒளிமயமான வாழ்வருளும் சுதர்சனப் பெருமாள்

Published On 2021-09-22 08:54 GMT   |   Update On 2021-09-22 08:54 GMT
நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அந்த அவதாரத்தில் இரண்யகசிபுவை தன்னுடைய நகங்களால் கீறி வதம் செய்தார். அவரது நகமாக இருந்தவர் சுதர்சனப் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவிஷ்ணு தன்னுடைய கரங்களில் வில், வாள், கதாயுதம், சங்கு, சக்கரம் என்று ‘பஞ்சாயுதம்’ கொண்டு காட்சி தருபவர். இதில் முதன்மையானதாக, சுதர்சன சக்கரம் உள்ளது. சுதர்சனரைப் பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

* சுதர்சனருக்கு உரிய சிறப்பு நட்சத்திரம், சித்திரை ஆகும். இந்த நாளில் அவரை வழிபாடு செய்வது விசேஷமான பலனைத் தரும்.

* கும்பகோணம் சக்கர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில், பிரம்மதேவன் நீராடி யாகம் செய்ததாக தல வரலாறு சொல்கிறது. அப்போது பாதாளத்தில் இருந்து சக்கரம் வெளிப்பட்டது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு காட்சி தந்த நாராயணன்தான் இன்று, சக்ரபாணியாக அருள்பாலிக்கிறார்.

* சாளக்கிராமங்களில் ‘சுதர்சன சாளக்கிராமம்’ மிகச் சிறப்புக்குரியது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்கிராமம், சுதர்சனமாகும். திருமாலின் சக்கராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

* பெருமாள் ஆலயங்களில் சக்கரத்தாழ்வாரை தரிசிப்பவர்கள், அவருக்கு பின்னால் நரசிம்மர் உருவம் இருப்பதை கண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். சக்கரத்தாழ்வாரை வலம் வரும்போது, பின்புறம் உள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும். இவர்கள் இருவரையும் வலம் வந்து வழிபடும்போது, நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமி களையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

* நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அந்த அவதாரத்தில் இரண்யகசிபுவை தன்னுடைய நகங்களால் கீறி வதம் செய்தார். அவரது நகமாக இருந்தவர் சுதர்சனப் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.

* வாமன அவதாரத்தில், சுக்ராச்சாரியாரின் கட்டளையை மீறி வாமனனுக்குத் தானம் கொடுக்க முன்வந்தான், மகாபலி சக்கரவர்த்தி. அப்போது நீர்வார்க்கும் கமண்டலத்திற்குள் வண்டாக மாறி அடைத்துக் கொண்டார், சுக்ராச்சாரியார். இதையறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். இதில் சுக்ராச்சாரியார் கண் பார்வையை இழந்தார். இங்கு தர்ப்பை புல்லாக வந்தவரும், சுதர்சனர்தான்.

* திருவரங்கம், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர் கோவில், திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில், சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

* நெருப்பு தலைமுடியும், மூன்று கண்களும், 16 கரங்களும், அதில் பதினாறு வித ஆயுதங்களும் கொண்டவர், சுதா்சனப் பெருமாள். 16 திருக்கரங்களுடன் அமைந்த சுதர்சனப் பெருமாளின் திருஉருவத்தை வழிபாடு செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். தீவினைகள், தோஷங்கள் அகலும்.

* சக்கரத்தாழ்வாரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது விசேஷமானதாகும்.
Tags:    

Similar News