உள்ளூர் செய்திகள்
சுசீந்திரம் அருகே விபத்து

சுசீந்திரம் அருகே விபத்தில் 3 பேர் பலி

Published On 2022-04-17 07:41 GMT   |   Update On 2022-04-17 07:41 GMT
சுசீந்திரம் அருகே 3 பேர் விபத்தில் பலியானது எப்படி? - புது மாப்பிள்ளை பற்றி உருக்கமான தகவல்கள்
கன்னியாகுமரி:

பூதப்பாண்டி அருகே சீதப்பால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 22). கொத்தனார்.

இவர் மயிலாடியில் உள்ள தனது சகோதரி பவித்ரா வீட்டில் வசித்து வந்தார். நேற்று மதியம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த முகர்ஜி பாஸ் (33) என்பவரை சந்திக்க செல்வதாக கூறி விட்டு முத்துகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்தார்.

அதன் பிறகு முத்து கிருஷ்ணன், முகர்ஜி பாஸ் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த தேவ் ஆனந்த் (26) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட இவர்கள் சுசீந்திரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.  பிணமாக கிடந்த முத்துகிருஷ்ணன், முகர்ஜி பாஸ், தேவ் ஆனந்த் ஆகிய மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தில் 3 பேர் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் சிக்கி பலியான மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து வந்தபோது புறவழிச் சாலையில் முன்னால் சென்ற கார்களை முந்தி சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி உள்ளது. இதில் 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

பலியான முத்து கிருஷ்ணனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.அவர் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரும-ணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து எதிர்ப்பையும் மீறி அவர் திருமணம் செய்து உள்ளார்.

திருமணமான 20 நாட்களில் விபத்தில் முத்துக்கிருஷ்ணன் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்துகிருஷ்ணன் விபத்தில் பலியான தகவலை கேட்டதும் அவரது காதல் மனைவி கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. 

பலியான முகர்ஜி பாசுக்கு சோபியா என்ற மனைவியும், ரஞ்சித், மஜித் என்ற மகன்கள் உள்ளனர். சோபியா நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். முகர்ஜி பாஸ் தூத்துக்குடியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். 

அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். நேற்று காலையில் ஊருக்கு வந்த முகர்ஜி பாஸ் தனது மனைவியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனைவி சோபியா ஆஸ்பத்திரிக்கு சென்று இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை அறையில் நிற்பதாகவும் இரவுதான் வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். 

வீட்டிற்கு மனைவி வர இரவு ஆகும் என்பதால் முகர்ஜி பாஸ், முத்துகிருஷ்ணனுடன் கன்னியாகுமரிக்கு செல்ல முடிவு செய்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும் போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். பலியான தேவ் ஆனந்த்துக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவர் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்றும் உள்ளது.

பலியான முத்துகிருஷ் ணன், முகர்ஜி பாஸ், தேவ் ஆனந்த்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
Tags:    

Similar News