செய்திகள்
ஸ்புட்னிக்-வி

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது

Published On 2021-05-01 05:58 GMT   |   Update On 2021-05-01 05:58 GMT
ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை வழங்க அந்த நாட்டு அரசு முன்வந்தது. இது சம்பந்தமாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசினார்.

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது வரை இந்தியாவில் 15 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்று முதல் 18 வயதில் இருந்து 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது.

இதனால் அதிக தடுப்பூசி தேவைப்படுகிறது. அதற்கு போதுமான அளவிற்கு தற்போது போடப்படும் 2 தடுப்பூசிகளின் சப்ளை இல்லை. எனவே வேறு தடுப்பூசிகளையும் வாங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை வழங்க அந்த நாட்டு அரசு முன்வந்தது. இது சம்பந்தமாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசினார்.


இந்தியாவின் அவசர தேவைக்கருதி உடனடியாக தடுப்பூசி மருந்தை வழங்குவதாக ரஷியா அறிவித்தது. அதன்படி முதல் தடுப்பூசி மருந்து இன்று இந்தியா வருகிறது. எவ்வளவு டோஸ் மருந்துகள் வருகின்றன என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சம் டோஸ் மருந்துகள் இந்த மாதத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பகுதி மருந்து இன்று இந்தியா வருகிறது.

ஜூன் மாதத்தில் சுமார் 50 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் இந்தியா வர உள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் மருந்தை ரெட்டி லேபரெட்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுபோக மேலும் 5 நிறுவனங்கள் ஸ்புட்னிக் மருந்தை இந்தியாவில் தயாரிக்க முயற்சித்து வருகின்றன. அவை அனைத்தும் தயாரிப்புகளை தொடங்கும் போது இந்தியாவில் தாராளமாக ஸ்புட்னிக் மருந்துகள் கிடைக்கும்.

ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தை உலகம் முழுவதும் 60 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. உலகிலேயே முதன் முதலில் தயாரான கொரோனா தடுப்பூசி மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News