உள்ளூர் செய்திகள்
காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் உடற்பயிற்சியாளர் தற்கொலை
செங்குன்றம் அருகே காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் உடற்பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
கொளத்தூர்:
செங்குன்றம் அடுத்த அலமாதி, கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அவினாஷ் (வயது26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணி செய்து வந்தார்.
அவினாஷ் மாதவரத்தில் உள்ள பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் அவினாஷ் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த 3ந் தேதி திரு.வி.க நகரில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு வந்த அவினாஷ் அங்கிருந்த காய்ச்சலுக்கான 20 மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
வீட்டில் இருந்தவர்கள் அவினாசை உடனடியாக மீட்டு அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவினாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.