செய்திகள்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அவதி
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மெய்யனூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக ஈரோடு, கோவை, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் செல்கின்றன. மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு, ஜங்ஷன் ஆகிய பகுதிகளுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்தநிலையில், புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள மெய்யனூர் அரசு போக்குவரத்து கழகம் அருகில் சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து வேகமாக செல்லும் கார், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் இறங்கி சிக்கிக் கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேலும் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் சென்டர் மீடியனில் உள்ள விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் வாகனங்கள் எதிர்பாராமல் பள்ளத்தில் இறங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பள்ளத்தை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.