செய்திகள்
கோவில்பட்டியில் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வசந்தநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகன் அருண் (வயது 27). கார் டிரைவர். இவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இவருடைய மனைவி மாடத்தி (24). இவர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலையில் வேலைக்கு சென்ற மாடத்தி மாலை 4 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டில் அருண் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.