செய்திகள்
மக்களவையில் இருந்து காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இதுதொடர்பாக விவாதிக்கும்படி மக்களவையில் இன்று காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக மக்களவையில் இதுபற்றிய பேசிய திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் எம்பிக்களும் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.