தொழில்நுட்பம்
இங்கு ஐபோன் 12 உற்பத்தி செய்வதில் பெருமை கொள்கிறோம் - ஆப்பிள் வெளியிட்ட புது தகவல்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 உற்பத்தி குறித்து புதிய தகவலை அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தி துவங்கி இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் விரைவில் இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தி துவங்கும் என தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக ஐபோன் 12 உற்பத்தியை இந்தியாவில் துவங்குவதில் பெருமை கொள்கிறோம் என ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. எனினும், எந்த நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறது என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்தியாவில் இயங்கி வரும் தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஆலையில், ஐபோன் 12 உற்பத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. எனினும், இதனை ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சீனாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியை பெருமளவு குறைக்கும் நடவடிக்கைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வாஷிங்டன் மற்றும் பீஜிங் இடையிலான வர்த்தக போட்டியே இதற்கு முக்கிய காரணம் ஆகும். முன்னதாக பாக்ஸ்கான் நிறுவனம் ஐபேட் மற்றும் மேக்புக் உற்பத்தியை சீனாவில் இருந்து வியட்நாமிற்கு மாற்றுவதாக தகவல் வெளியானது.