செய்திகள்
பஸ்சில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை : விழுப்புரம் கோட்டத்தில் 3,200 அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு

Published On 2021-04-14 17:57 GMT   |   Update On 2021-04-14 17:57 GMT
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 3,200 அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம்:

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இந்நோயின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிப்பவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்ற பஸ்களை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்னிலையில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் தற்போது ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்ற 3,200 பஸ்களின் மூலம் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக விழுப்புரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 60 பணிமனைகளில் உள்ள பஸ்களில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளும், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.
Tags:    

Similar News