வழிபாடு
கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால், பக்தர்களின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடியது: கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதி

Published On 2022-01-01 03:08 GMT   |   Update On 2022-01-01 03:08 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராட 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் இன்றி கடற்கரை வெறிச்சோடியது. கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் விதமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. எனினும் நள்ளிரவில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்றும், இன்றும் (சனிக்கிழமை) பக்தர்கள் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நாழிக்கிணற்றிலும் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பக்தர்களின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. புத்தாண்டு தினமான இன்றும் (சனிக்கிழமை) கோவில் கடற்கரைக்கு செல்லவும், கடலில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை 1 மணி முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழக்கப்பட்டு உள்ளது.

புத்தாண்டு தினமான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 3.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படுகிறது.
Tags:    

Similar News