உள்ளூர் செய்திகள்
அம்மணியம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் போலீசார் - அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.

திருப்பூர் அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

Published On 2021-12-07 08:27 GMT   |   Update On 2021-12-07 10:15 GMT
அம்மணியம்மாள் மரணம் குறித்து அவரது மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த வெள்ளிரவெளி ஊராட்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 55). கணவர் இறந்த நிலையில் மகன் மோகனசுந்தரத்துடன் வசித்து வந்தார். அவர் கடந்த 18-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்மணியம்மாள் தற்கொலை குறித்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்து கொலை செய்திருப்பதாகவும் அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, ஊத்துக்குளி தாசில்தார் ஜெகதீசன் முன்னிலையில் அம்மணியம்மாள் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனை முடிவில் அம்மணியம்மாள் மரணம் குறித்து உண்மை விவரம் தெரியவரும் என வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அம்மணியம்மாள் மரணம் குறித்து அவரது மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News