ஆன்மிகம்
வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்

பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில்

Published On 2021-10-06 05:25 GMT   |   Update On 2021-10-06 05:25 GMT
இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ‘இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும்’ என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒருநாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள்.

அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் ‘வல்லங்குளம்’ எனப்பட்டது.

காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர். பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நதி.

நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.
Tags:    

Similar News