உள்ளூர் செய்திகள்
கோவையில் 2 வீடுகளில் 32 பவுன் நகை-பணம் கொள்ளை
அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்த மர்மநபர்கள் நகை&பணத்தை கொள்ளையடித்து சென்றனர்
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் சையது இபுராகிம் (வயது 30). தனியார் நிறுவன மேலாளர். கடந்த 10&ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் வலது பக்கத்தில் இருந்த கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அவர் பீரோவில் இருந்த 29 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையர்கள் மேல் மாடியில் வசிக்கும் அர்ச்சுணன் (58) என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
நேற்று வீட்டிற்கு திரும்பிய சையது இபுராகிம் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவை பார்த்த போது அதில் இருந்த 29 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மேல் மாடியில் வசித்து வரும் அர்ச்சுணன் வீட்டிலும் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்க ப்பட்டனர். அவர்கள் 2 வீடுகளிலும் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 2 வீடுகளின் கதவை உடைத்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.