செய்திகள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி எச்சரிக்கை

Published On 2019-11-12 22:40 GMT   |   Update On 2019-11-12 22:40 GMT
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையை மாற்ற நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதற்கு லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் சீர்திருத்தங்களை அமல்படுத்த நிர்வாக கமிட்டியையும் நியமித்தது.

புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது. மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் தான் தொடர்ச்சியாக பதவியில் இருக்க முடியும். அதன் பிறகு மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் 3 ஆண்டுகள் இடைவெளி விட்டு தான் வர முடியும். மேலும் கிரிக்கெட் வாரிய செயலாளரை விட தலைமை செயல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது என்பது உள்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்று இருந்தன. நிர்வாக சீர்திருத்தங்கள் முடிந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் நடந்தது.

புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றம் செய்ய புதிய நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாகவும், அது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து லோதா தலைமையிலான கமிட்டியில் செயலாளராக இருந்த கோபால் சங்கரநாராயணன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மாற்றம் செய்ய பொதுக்குழுவில் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் உடனடியாக இத்தகைய நிர்வாக சீர்திருத்தங்களை நீர்த்து போகச்செய்யும் முயற்சிகளை எதிர்த்து நாம் செயல்படாமல் இருந்தாலோ? அல்லது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து இந்த பிரச்சினையை கவனத்தில் கொள்ளாமல் விட்டாலோ? அது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கேலிக்கூத்தாக்கி விடும். கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு இன்னமும் கூட செயலாற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றால் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் விரயமாகி விடும்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது தான். முக்கியமான சீர்திருத்தங்கள் எல்லாம் காணாமல் போய்விட வைப்பது தான் அவர்கள் நோக்கம். நாங்கள் விதிமுறையை மாற்ற சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே விதிமுறையை மாற்றம் செய்வதில் தவறில்லை என்று அவர்கள் வாதிடலாம். ஆனால் அது குறுகிய பார்வையாகும்’ என்றார்.
Tags:    

Similar News