ஆன்மிகம்
கிருமி நாசினி தெளிக்கும் பணியை பாலமுருகனடிமை சுவாமிகள் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி

Published On 2020-09-01 06:13 GMT   |   Update On 2020-09-01 06:13 GMT
வேலூர் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விளையாட்டு அரங்கம், தியேட்டர்கள், மால்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்கள் திறக்க அனுமதியும், அதன்பின்னர் சில நாட்களில் நகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உடைய வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறந்து வழிபாடு செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த அனைத்துக் கோவில்களிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தவற்காக குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் போடப்பட்டுள்ளது.

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வேலூர் கோட்டை சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுகிறது. பொதுமக்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலுக்கு செல்ல கோட்டை திறக்கப்பட்டிருக்கும் என்றும், பிற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தேவாலயங்கள், மசூதிகளிலும் இன்று முதல் வழிபாடு நடைபெற உள்ளது.
Tags:    

Similar News