செய்திகள்
கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
கோயம்பேட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.486 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில் 3-ம் நிலை கழிவுநீர் எதிர் சவ்வூடு பரவல் முறை மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி இதன் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுத்திகரிப்பு நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து, நீர் மறு பயன்பாடுக்கொள்கையை முதலமைச்சர் வெளியிட அதை துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.