ஆட்டோமொபைல்
விரைவில் இந்தியா வரும் ஆசியாவின் முதல் பறக்கும் கார்
ஆசியாவின் முதல் பறக்கும் கார் கான்செப்ட் மாடலை மத்திய வான்வழி போக்குவரத்து துறை மந்திரி ஆய்வு செய்தார்.
இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவன குழுவை சந்தித்து பறக்கும் கார் கான்செப்ட் மாடலை சோதனை செய்தார்.
இது ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் என்ற பெருமையை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கான்செப்ட் உண்மையாகும் பட்சத்தில் பறக்கும் காரை போக்குவரத்து மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என சிந்தியா தெரிவித்தார்.
மேலும் பறக்கும் கார்களை அவசர கால மருந்துகளை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். முழுமையாக தயாராகும் பட்சத்தில் இந்த ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வி.டி.ஓ.எல். வாகனம் இரண்டு பேரை சுமந்து செல்லும் என விணாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் காரில் கோ-ஆக்சியல் குவாட்-ரோட்டார் சிஸ்டம் உள்ளது.
இத்துடன் எட்டு பி.எல்.டி.சி. மோட்டார்கள் மற்றும் எட்டு பிட்ச் ப்ரோபெல்லார்கள் உள்ளன. மோட்டார்களை இயக்க இந்த வாகனத்தில் பயோ-பியூவல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பறக்கும் காரில் அதிகபட்சம் 1300 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். இந்த கார் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.