செய்திகள்
தற்கொலை முயற்சி

அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

Published On 2020-11-22 12:33 GMT   |   Update On 2020-11-22 12:33 GMT
அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எலிமருந்தை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார்(வயது 40). நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. தினேஷ்குமார் தற்போது மெலட்டூர் ஆபிரகாம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தினேஷ்குமார் எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார். முன்பு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார்.

பின்னர் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். அங்கு பணியாற்றியபோது ஒரு பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தினேஷ்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி பல மாதங்களுக்கு பிறகு திருச்சி மத்திய மண்டலத்தில் தஞ்சை சரகத்துக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில் பணி மாறுதல் ஆகி பல மாதங்கள் கழித்தும் பழைய பிரச்சினைகள் தொடர்வதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

மன உளைச்சல் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் எலிமருந்தை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News