உள்ளூர் செய்திகள்
சட்டவிரோதமாக மது, போதை பொருட்கள் விற்பனை - திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் முழுவதும் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் சேயூர், காமநாயக்கன்பாளையம், காவல் நிலையங்களில் தலா 4 வழக்குகளும், தாராபுரம், காங்கேயம், ஊத்துக்குளி ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், அவிநாசி, குன்னத்தூர், பல்லடம், அவிநாசிபாளையம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், அலங்கியம், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 27 கிலோ 760 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் குறிப்பாக பல்லடம் உட்கோட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 25 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை பதுக்கி விற்ற காளிமுத்து (34) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 318 தமிழ்நாட்டுமதுபான பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.