ஆன்மிகம்
தகட்டூர் பைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி திருவிழா சிறப்பு யாகத்துடன் தொடங்கியது
தகட்டூர் பைரவர் கோவிலில் இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி திருவிழா சிறப்பு யாக பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசிக்கு அடுத்தபடியாக தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் பைரவர் அவதார திருநாளாகவும், காலபைரவாஷ்டமி திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி திருவிழா நேற்று சிறப்பு யாக பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன. வருகிற 8-ந் தேதி காலபைரவாஷ்டமி பூஜைகள் நடைபெறுகின்றன.