ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனி கோவிலில் பக்தர்கள் அதிகரிப்பை கட்டுபடுத்த தரிசனத்துக்கு ரூ.200 கட்டணம்

Published On 2020-09-08 09:14 GMT   |   Update On 2020-09-08 09:14 GMT
பழனி கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க கார்த்திகை தினத்தன்று தரிசனத்துக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி கோவில்களில் வழிபாடுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் குறைந்தஅளவு பக்தர்களே கோவிலுக்கு வந்த நிலையில் நேற்று மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியதால் பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட்டம் அலைமோதியது.

இதே போல பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கும் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்தனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து மட்டுமே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பதிவு செய்த பக்தர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு பிறகு கீழே இறங்கி வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாத கார்த்திகை என்பதாலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் கோவிலுக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் ஆன்லைனில் பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு ரூ.200 கட்டணம் என அறிவித்துள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கார்த்திகை தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாக பதிவு செய்துள்ள கிராமப்புற பக்தர்கள் மட்டுமே குடமுழுக்கு நினைவரங்கின் வழியாக படிப்பாதையை அடைந்து மலைக்கோவிலுக்கு சென்று பொது தரிசனத்திலும், சிறப்பு தரிசனமாக ரூ.200 செலுத்தியும் இரு வழிகளில் அனுமதிக்கப்படுவார்கள். கால பூஜைக்கு அனுமதி இல்லை. தேங்காய், பழம், பூஜை பொருட்கள் கொண்டு வரக்கூடாது. கட்டாய முக கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News