செய்திகள்
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியை தாண்டியது
டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டிசம்பர் மாதத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் கிடைத்த தொகையை காட்டிலும் 12 சதவீதம் அதிகம்.
மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 21 ஆயிரத்து 365 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 27,804 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 57,426 கோடி ரூபாயும், செஸ் மூலம் ஈட்டப்பட்ட 8,579 கோடி ரூபாயும் அடங்கும்.
இதன்மூலம் கடந்த 3 மாதமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளது. 2020 அக்டோபரில் ரூ.1.05 கோடி, நவம்பரில் ரூ.1.04 லட்சம் கோடி வசூலித்த நிலையில், டிசம்பரில் ரூ.1.15 லட்சம் கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.