செய்திகள்
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-11-06 07:43 GMT   |   Update On 2020-11-06 07:43 GMT
பருவ மழை விரைவில் தொடங்க இருப்பதால் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வேளாண் விதை பண்ணையில் நடந்த ஆய்வின் போது கலெக்டர் சாந்தா அறிவுறுத்தினார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் அரசு வேளாண் விதை பண்ணையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்களையும் அதற்கு பயன்படுத்தப்படும் மருந்து, களைப்பற்றியும், தண்ணீர் வரத்து பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பணிபுரிந்த விவசாய தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு வருகிற 30-ந் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய அவகாசம் இருந்தாலும், விவசாயிகள் விரைவில் ஒரு ஏக்கருக்கு ரூ.488-ஐ செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறவும். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்தி 48 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது.

பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். சென்ற ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்டத்தில் ரூ.201 கோடி வழங்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் விடுபட்டவர்கள் நேரடியாக புகார் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோடி, வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், வேளாண்மை துணை இயக்குனர் சாமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News