ஆன்மிகம்
சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

Published On 2019-10-29 06:11 GMT   |   Update On 2019-10-29 06:11 GMT
பழனி முருகன் கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் கந்தச‌‌ஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை காலசந்தி பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளிதெய்வானை, முத்துக்குமாரசுவாமி ஆகியோருக்கு காப்புகட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் உச்சிகால பூஜையில் மூலவருக்கு காப்பு கட்டப்பட்டது. மலைக்கோவிலில் உச்சிகால பூஜையின் போது கல்பபூஜை நடைபெற்ற பிறகு விநாயகர், மூலவர், உற்சவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், கொடிமரம், மயில், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்புகட்டு நடந்தது.

அதையடுத்து ச‌‌ஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காப்புகட்டிக் கொண்டனர். காப்புகட்டும் நிகழ்ச்சியை கோவில்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் ஆகியோர் செய்தனர்.

7 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், தினசரி சின்னக்குமாரர், சண்முகர் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. 
Tags:    

Similar News