செய்திகள்
முருங்கைக்காய்

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

Published On 2021-04-11 10:58 GMT   |   Update On 2021-04-11 10:58 GMT
கொரோனா தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருமணம், விழாக்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ முருங்கைக்காய் திசையன்விளை மார்க்கெட்டில் கிலோ ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கைக்காய்கள் பயிரிடப்பட்டுள்ளது.

இவைகளில் செடி முருங்கை, குரூஸ் முருங்கை, அழகிய விளை ரகம் என பல்வேறு வகையான முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கை காய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்காக திசையன் விளையில் இருந்து ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் முருங்கை காய்க்கும், மழை காலங்களில் பூக்கள் உதிர்ந்து விடும். அந்த நேரங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். அப்போது ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படும்.

தற்போது கோடை வெயிலால் பூக்கள் உதிராமல் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள ஆண்டிபட்டி, ஒட்டன் சத்திரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் முருங்கைகாய் விளைச்சல் அதிகம் உள்ளது. தேவைக்கு அதிகமாக உற்பத்தி ஆனதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் முருங்கைக்காய்கள் நிறம் மாறிவிடுகிறது. இதனால் ஏற்றுமதியும் தடைபட்டுள்ளது. மேலும் கொரோனா தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருமணம் மற்றும் விழாக்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு கிலோ முருங்கைக்காய் திசையன்விளை மார்க்கெட்டில் கிலோ ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம் கடைசியில் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News