உள்ளூர் செய்திகள்
பாலசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

Published On 2022-01-10 12:35 GMT   |   Update On 2022-01-10 12:35 GMT
கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 

இதில் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி, இளநீர் காவடி போன்றவற்றை பக்தி பரவசத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க எடுத்துச் சென்று பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். 

இந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்யவும், தேரோட்டம் நடைபெறவும் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருந்தார். 

இந்நிலையில் பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பக்தர்கள் இன்றியும், எந்த ஒரு கடைகளும் இல்லாமலும் கொரோனா விதிமுறைகளின்படி தேரோட்டம் நடைபெற அனுமதி வழங்குமாறு நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். 

அதன் அடிப்படையில் பக்தர்கள் இன்றியும் எந்த ஒரு கடைகள் இன்றியும் தேரோட்டம் நடத்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் அனுமதி அளித்துள்ளார். அதன்படி வரும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தன்று இக்கோவிலில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. 

அதனையொட்டி இன்று பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது . இதில் சிவாச்சாரியார்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Tags:    

Similar News